Sunday, May 29, 2011

Ziyarath


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

அன்புள்ள சகோதர சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்......


(For Gmail recipients & others – having trouble to view this mail full in Tamil , please refer the attached PDF File)

கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்கள் குறித்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாக ஸுனன் திர்மிதியில் அறிவிக்கப்படும் ஹதீஸ்  
‘கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்’ என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஆதாரம்: திர்மிதி, இப்னுமாஜா, அஹ்மத், மற்றும் இப்னு ஹிப்பான்.
சிறுவிளக்கம்: இஸ்லாத்தின் ஆரம்ப காலக்கட்டங்களில் கப்ருகளுக்கு ஜியாரத் செய்வதை நபி (ஸல்) அவர்கள் முழுமையாகத் தடுத்திருந்தார்கள். பின்னர், ஸஹாபாக்கள் இஸ்லாத்தை ஓரளவு விளங்கிக் கொண்டதும் அவர்களை கப்ருகளை ஜியாரத் செய்யுமாறு கூறினார்கள். அதுவும் ஆண்களுக்குத்தான். பெண்கள் ஜியாரத் செய்வது குறித்து, அவ்வாறு செய்யும் பெண்களை சபிக்கவும் செய்தார்கள்.

ஜியாரத் செய்வதின் நோக்கம்:- கப்ருகளில் ஜியாரத் செய்யக்கூடிய ஆண்களின் நோக்கம் மறுமையைப் பற்றிய சிந்தனையை வளர்த்துக் கொள்வதற்காக மட்டுமே இருக்க வேண்டும். ‘கப்ருகளை ஜியாரத் செய்யுங்கள், நிச்சயமாக அது உலகப்பற்றை நீக்கும், மறுமையை நினைவு படுத்தும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுஸயீதுல் குத்ரி, நூல்: அஹ்மத்.
கப்றில் உள்ளவர்களுக்காக நாம் செய்ய வேண்டிய துஆ:- ‘முஃமினான மண்ணறைவாசிகளே! உங்களுக்கு ஸலாம் உண்டாகட்டும். நிச்சயமாக நாங்களும் அல்லாஹ் நாடினால் உங்களை மரணம் மூலம் சந்திப்பவர்களே!’
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், நஸயீ.
‘முஃமினான முஸ்லிமான மண்ணறைவாசிகளே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்! நிச்சயமாக, இன்ஷா அல்லாஹ் நாங்களும் உங்களை அடுத்து வருபவர்களே! உங்களுக்கும் எங்களுக்கும் அல்லாஹ்விடம் சுகவாழ்வைக் கேட்கிறோம்’
அறிவிப்பவர்: புரைதா (ரலி) நூல்கள்: முஸ்லிம், அஹ்மத் இப்னுமாஜா.
ஜியாரத் செய்யும்போது கவனித்து கடைப்பிடிக்கப்பட வேண்டியவைகள்:- 
* கப்ரு தரைக்கு மேல் உயர்த்தப்பட்டதாக இருக்கக்கூடாது.
* பூசி, மெழுகிய கட்டிடமாக இருக்கக்கூடாது.கப்ரில் அழுது புலம்புவது கூடாது.
* கப்ரில் அடக்கமாகி இருப்பவரிடம் நமது தேவைகளைக் கூறி பிரார்த்திக்கக் கூடாது.
* கப்ரில் உள்ளவர்களுக்காக நாம் அல்லாஹ்விடம், நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த துஆச் செய்ய வேண்டும்.
* இஸ்லாத்திற்கு மாற்றமான எந்தக் காரியங்களையும் செய்யக்கூடாது.
தர்ஹாக்களுக்கு ஜியாரத் செய்யச் செல்லலாமா?
நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு ஜியாரத் செய்ய அனுமதி வழங்கிய போது, இறந்தவர்களை அடக்கம் செய்யப்படும் இடங்களுக்குச் சென்று அங்குதான் ஜியாரத் செய்ய அனுமதித்தார்களே தவிர கப்ருகளில் கட்டிடங்கள் கட்டி, பூசி, மெழுகி இஸ்லாத்திற்கு முரணான காரியங்கள் நடைபெறும் இடங்களுக்குச் செல்ல சொல்லவில்லை. இதுபோன்ற இடங்களுக்குச் சென்று வருவது நபி (ஸல்) அவர்களின் கட்டளையை மீறுபவர்களுக்குத் துணை போவது போலாகும் என்பதை பின்வருபவைகள் விளக்குகின்றன.

கப்ருகளை வணங்குவதும், அதனிடம் கையேந்தி நிற்பதும் நபி (ஸல்) அவர்களின் காலத்திற்கு முன்பிருந்தே இருந்துவரும் பழக்கமாகும். நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த யூதர்களும், கிறிஸ்தவர்களும் தங்களுக்கு முன்னால் வாழ்ந்த நபிமார்கள் மற்றும் நல்லடியார்களின் கப்ருகளில் கட்டிடம் எழுப்பி, இன்று நம்மவர்கள் தர்ஹாக்களில் செய்வதைப்போல அதில் விளக்கு ஏற்றி, அதைப் பூசி, மெழுகி, பூஜை போன்ற சடங்குகள் செய்து அவர்களின் நினைவு நாட்களில் திருவிழாக்கள் (கந்தூரிகள்) நடத்தி வந்தனர்.கற்களையும், சிலைகளையும், கப்ருகளையும், இறந்தவர்களையும் வழிபடும் மக்களின் அறியாமை எனும் இருளை அகற்றி சத்தியத்தின் அறிவு எனும் ஒளியை பரப்ப வந்த நபி (ஸல்) அவர்கள், கப்ருகளின் மேல் கட்டிடங்கள் (தர்ஹா, மஸ்ஜிதுகள்) எழுப்பி, அதில் விளக்கு ஏற்றி, பூசி, மெழுகி, கந்தூரி நடத்துபவர்களைக் கடுமையாக சபித்ததோடல்லாமல் அவைகளை அலி (ரலி) அவர்கள் மூலமாக இடித்து தரைமட்டமாக்கினார்கள். இதுபற்றி நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள் அடங்கிய ஹதீஸ்கள் சிலவற்றைக் காண்போம்.

ஹதீஸ்:- ‘யஹூதிகளையும், நஸாராக்களையும் அல்லாஹ் சபிப்பானாக. ஏனெனில் அவர்கள் தங்களின் நபிமார்கள் மற்றும் நல்லவர்களின் கப்ருகளை மஸ்ஜிதாக ஆக்கிக் கொண்டனர்’ (நூல்: புகாரி)
ஹதீஸ்:- ‘அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்து விடும்போது அவரது கப்ரில் வணங்குமிடத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். அவர்களின் வடிவங்களையும் அதில் அமைத்து விடுகின்றனர். கியாம நாளில் அல்லாஹ்விடத்தில் அவர்கள்தான் படைப்பினங்களில் மிகவும் கெட்டவர்கள்’ அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி மற்றும் முஸ்லிம்.
ஹதீஸ்:- ‘கப்ருகள் பூசப்படுவதை நபி (ஸல்) அவர்கள் தடுத்தனர்’ அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), ஆதார நூல்கள்: அஹ்மத், முஸ்லிம், நஸயீ மற்றும் அபூதாவூத்.
ஹதீஸ்:- ‘கப்ருகள் பூசப்படுவதையும், அவற்றில் எதனையும் எழுதப்படுவதையும், அதன் மீது கட்டிடம் (தர்ஹா) எழுப்பப்படுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்தனர்’ அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: திமிதி.

அவ்லியாக்களின் கப்ருகளில் கந்தூரி விழாக்கள் நடத்தக்கூடாது:-
ஹதீஸ்:- ‘எனது கப்ரை(கந்தூரி) விழாக்கள் நடக்கும் இடமாக ஆக்கி விடாதீர்கள். உங்கள் வீடுகளையும் கப்ருகளாக ஆக்கி விடாதீர்கள். நீங்கள் எங்கிருந்த போதும் எனக்காக ஸலவாத்துச் சொல்லுங்கள். அது என்னை வந்தடையும்’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அபூதாவூத்.
ஹதீஸ்:- ‘யஹூதிகளும், நஸாராக்களும் தங்கள் நபிமார்களின் கப்ரை வணங்குமிடங்களாக ஆக்கிக் கொண்டனர். அல்லாஹ் அவர்களைச் சபிப்பானாக’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்.
ஹதீஸ்:- உங்களுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் தங்கள் நபிமார்களின் கப்ருகளையும், நல்லடியார்களின் கப்ருகளையும் வணங்குமிடமாக ஆக்கிவிட்டனர். அறிந்துகொள்க! கப்ருகளை வணங்குமிடமாக ஆக்கி விடாதீர்கள்! அதை நான் தடுக்கிறேன்’ அறிவிப்பவர்: அப்துல்லாஹ் அல் பஜலி (ரலி) நூல்: முஸ்லிம்.
தர்ஹாக்களை கட்டுபவர்கள் வேண்டுமானால் ‘நாங்கள் அவ்லியாக்களை வணங்குவதற்காக கட்டவில்லை’என்று கூறலாம். ஆனால் குர்ஆனும், ஹதீஸும் கூறுகிறது.
நேர்ச்சை ஒரு வணக்கமே, அதை அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டும்.
* பிரார்த்தனை ஒரு சிறந்த வணக்கமாகும்.* முறையிடுதல் ஒரு வணக்கமாகும். 
* அறுத்துப் பலியிடுதல் ஒரு வணக்கமாகும்.
* பயபக்தியும் ஒரு வணக்கமாகும்.
* பேரச்சமும் ஒரு வணக்கமாகும்.

இறைவனுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களான இவைகள் அனைத்தும் அந்த தர்ஹாக்களில் நடைபெறுவதால் அதுவும் வணங்குமிடமாகவே உள்ளது. எனவே, நிச்சயமாக இறைவனுக்கு இணை வைத்து வணங்கப்படும் இடமாகிய இந்த தர்ஹாக்களைக் கட்டியவர்கள் மேற்கூறப்பட்ட நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களை நிராகரித்தவர் ஆவார்.
தரைமட்டத்திற்கு மேல் இருக்கும் கப்ருகளை தரைமட்டமாக்குவதற்கு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்:-
ஹதீஸ் ஆதாரம்:- ‘உயரமாக்கப்பட்ட எந்த கப்ரையும் தரைமட்டமாக்காமல் விடாதே என்று நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்’ என்று அலி (ரலி) அவர்கள் கூறினார்கள்’ அறிவிப்பவர்: அபுல் அய்யாஜ் அல் அஜதி (ரலி) நூல்கள்: அபூதாவூத், நஸயீ, திர்மிதி, அஹ்மத்.

எனவே சகோதர சகோதரிகளே, நபி (ஸல்) அவர்களால் இந்த அளவிற்கு கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ள கப்ருகளில் கட்டிடம் எழுப்பி அதில் செய்யப்படும் அனாச்சாரங்கள் எப்படியோ இஸ்லாத்தின் எதிரிகளால் நமது மார்க்கத்தில் புகுத்தப்பட்டு விட்டது. இஸ்லாத்தைப் பற்றி அடிப்படை அறிவு இல்லாத முஸ்லிம்கள் இதில் ஈடுபட்டு அல்லாஹ், ரஸூலின் (ஸல்) சாபத்திற்கு ஆளாகி, இறைவனிடமிருந்து என்றுமே மன்னிப்பே கிடைக்காத ‘இணைவைத்தல்’ எனும் கொடிய பாவத்தைச் செய்த குற்றவாளியாகின்றனர். அல்லாஹ் நம் அனைவரையும் இதுபோன்ற குற்றங்கள் புரிவதிலிருந்து காப்பாற்றி நம்மை மன்னிதருள வேண்டும். ஆமீன்



எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்டி அதில் நிலைத்திருக்க நாம் அனைவரும் அவனிடம் மட்டுமே துஆ செய்து கொள்வோம் 

வஸ்ஸலாம்  
சிந்திக்க தூண்டும் உங்கள் சகோதரன் 
தக்கலை கவுஸ் முஹம்மது – பஹ்ரைன்


ü     படைக்கப்பட்டவர்களை விட்டு, விட்டு படைத்தவனை மட்டுமே  வணங்குவோம்  !
ü     அல்லாஹ்வும் ரசூல் (ஸல்) அவர்களும் காட்டித்தந்த நேர்வழியை பின்பற்றுவோம் !
ü     அல்லாஹ்வின் கட்டளை - நமது  கடமை - நன்மையை ஏவி தீமையை தடுப்போம் !